சென்னை: ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்,கலப்பின காளைகளை அனுமதிக்கக்கூடாது என  தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே பங்குபெற அனுமதிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும்,  நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  வாதத்தின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில், நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டு கலாச்சார பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு சார்பில்,  நாட்டு மாடுகளுடன்,  வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதில் எந்தவித பிரச்சினை இல்லை என்று கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ற அரசுத்தரப்பு வாதத்தை நிராகரித்ததுடன்,  ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இனிமேல், வெளிநாட்டு இனங்கள் (போஸ் டாரஸ்) அல்லது கலப்பின இன காளைகள் (போஸ் டாரஸ் x போஸ் இண்டிகஸ்) போன்றவற்றை தவிர்த்து, நேரடி அரசு காளை உரிமையாளர்கள் /விவசாயிகளை ஊர் ஊக்குவிக்க ஊக்குவிக்க வேண்டும், மேலும் அரசு மானியம் அல்லது ஊக்கத்தொகை மூலம் நாட்டு இன மாடுகள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்..

ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு முன் கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். விலங்குகளின் இனச்சேர்க்கை உரிமையை மறுக்கும் என்பதால், நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விலங்குகளின் செயற்கை கருவூட்டலை முடிந்தவரை தவிர்க்குமாறு நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளின் சொந்த இனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, தமிழகஅரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு முன் கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.