சென்னை: தமிழ்நாட்டில் ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன்,  திராவிட கொள்கைக்கு எதிராக மாநாடு நடத்த கூடாது என காவல் துறை அனுமதி மறுக்க முடியாது என்றும், திராவிட கொள்கைக்கு ஆதரவாக மட்டும் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் காட்டமாக கூறியது.

தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டு, அதில் பேசிய உதயநிதியின் பேச்சு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘திராவிட ஒழிப்பு மாநாடு’  நடத்த ஒரு தரப்பினர் அனுமதி கோரியுள்ளனர்.

மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனரும், மீண்டெழும் பாண்டியன் வரலாறு புத்தகத்தின் ஆசிரியருமான செந்தில் மள்ளர்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘திராவிட ஒழிப்பு மாநாடு’  நடத்த அனுமதி கோரி  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அவரது மனுவில், திராவிட கருத்தியலுக்கு எதிராக ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் திட்டமிட்டு, அதை ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று, பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தின் உள்ளரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கும்படி காவல்துறையில்,  தமிழர் சமுதாய கூட்டமைப்பின் சார்பில் அனுமதி கோரி, விண்ணப்பித்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

காவல்துறையினரின்  உத்தரவை ரத்து செய்து, நவம்பர் 1ஆம் தேதியன்று திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த அனுமதி வழங்கவும், அனுமதி மறுத்த காவல்துறை 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.விஜயேந்திரன், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி காவல் ஆய்வாளரிடம், திராவிட ஒழிப்பு மாநாடு அனுமதி கறித்த  ஆகஸ்ட் 8 ஆம் தேதி விண்ணப்பித்ததாகவும், ஆனால் மாநாடு நடக்க இருந்த நாளன்று கடைசி நேரத்தில், அனுமதி மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், இந்த மாநாடு நடத்துவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அமைப்பின் கூட்டத்தில் திராவிட கொள்கை குறித்த கருத்துகள் பெரும்பான்மைக்கு விரோதமாக பரிமாறப்படலாம் என்பதற்காக, அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தடை செய்ய கூடாது என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்திற்காக, கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்றும், ஜனநாயக அமைப்பில் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு கொள்கை குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என அனைவரையும் வற்புறுத்த இயலாது என்று கூறிய நீதிபதி, ஒரு கொள்கை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கொண்டிருக்க உரிமை உள்ளதால், திராவிடக் கொள்கை பற்றிய கருத்துக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என்பதற்காக மட்டும் கூட்டத்தை தடுக்க கூடாது என்றும் கூறினார்.

மேலும் மாநாட்டிற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறையின் உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி,  மனுதாரர்,  நவம்பர் 1ஆம் தேதி நடக்க உள்ள கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் புதிதாக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தியதுடன்,  அதற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்  உத்தரவிட்டதுடன்,  இந்த மாநாட்டில், யாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.