சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ( மார்ச் 25ந்தேதி) பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் 405 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது.  இதையொட்டி,  தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.   வேட்புமனுத்தாக்கல்  நாளை (மார்ச்  27-ந் தேதி)  கடைசி நாளாகும்.  அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த நிலையில், நேற்றைய தினமான   மார்ச் 25ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் பவுர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வருகின்றன. இதனால் மார்ச் 25ம் தேதியை தான் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.  மேலும் நேற்றைய நாள் சுபமுகூர்த்த நாளாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி நேற்று மாநிலம் முழுவதும்  405 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் பல திராவிட கட்சிகள் இந்து மத நம்பிக்கைகளான  நல்ல நேரம், திதிகள் போன்றவற்றை பார்க்க மாட்டோம் என்று மார்த்தட்டி கொண்டாலும், தங்களது வெற்றிக்காக நல்ல நேரத்தை பார்த்தே வேட்புமனு தாக்கலை செய்துள்ளனர். இதனால், நேற்று ஒரே நேரத்தில் திமுக, அதிமுக என  பல கட்சி வேட்பாளர்களும் தேர்தல் அலுவலகத்தில் கூடியதால், சலசலப்புகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும்  405 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் 22 பேரும், 21ஆம் தேதி 9 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நிலையில், நேற்றைய தினம் (மார்ச் 25) பவுர்ணமி நாளை முன்னிட்டு, அதிக பட்ச வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வடசென்னை தொகுதி வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் இந்நாள் அமைச்சரிடையே கடும் வாக்குவாதம்! பரபரப்பு…