சென்னை:

“தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு” என்று தினகரன் நாளிதழில் வெளியான செய்தி தவறு என தமிழக காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறைதலைவர் கோபண்ணா மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்றைய தினகரன் நாளேட்டில், “தமிழக காங்கிரஸில் 36 மாவட்டத் தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு”என்ற அடிப்படை ஆதாரமற்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பட்டியலை வெளியிடுவதற்கு தினகரன் செய்தியாளருக்கு என்ன அவசியம் என்று தெரியவில்லை. இதைப்போல வேறுகட்சியின் பட்டியலை வெளியிட முடியுமா?

மாவட்டத் தலைவராக யாரை நியமிப்பது என்ற முடிவை தமிழக காங்கிரஸ் எடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலோடுதான் அந்த பட்டியல் வெளியிடப்படும். இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எந்த பட்டியலும் காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பப்படவில்லை. இந்நிலையில், அந்த நடைமுறைக்கு குந்தகம் விளைவிக்கிற வகையில், தினகரன் நாளேடு ஒரு பட்டியலை வெளியிடுவது, காங்கிரஸ் கட்சியின் நடைமுறையில் அப்பட்டமாக தலையிடுகிற முயற்சியாகும்.

காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகள், பேட்டிகள் ஆகியவற்றை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு நல்லுறவை வளர்த்து வருகிற தினகரன் நாளேட்டில், இத்தகைய செய்திகளை வெளியிடுவதற்கு காரணமானவர்களுக்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருப்பது புரிகிறது. அந்த உள்நோக்கம் குறித்து தினகரன் நிர்வாகம் உரிய விசாரணையை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும். தினகரன் நிர்வாகத்துக்கும் ஆசிரியர் குழுவுக்கும் சம்பந்தமில்லாத இத்தகைய செய்திகள் யாரோ ஒருசிலரது தூண்டுதலின் பேரில் வெளிவருவது மிகுந்த வேதனைக்குரியதும், பத்திரிக்கை தர்மத்திற்கு விரோதமானதும் ஆகும்.

காங்கிரஸ் கட்சியை கடுமையாக பாதித்துள்ள இந்த செய்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சார்பாக அதிகாரப்பூர்வமாக நான் மறுக்கிறேன். எனது மறுப்பை தங்களது நாளேட்டில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

– ஆ.கோபண்ணா