திருமலை: திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் பக்தர்களுக்கு அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தேவஸ்தான் பல்வேறு அறிவுறுத்தல்களையும், பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கு தினசரி  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், திருப்பதி திருமலையில் உள்ள மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பக்தர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி இரவு அன்று அலிபிரி மலைப்பாதையில்  நடந்து சென்ற ஆந்திராவை சேர்ந்த குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசிக்க சென்ற  குடும்பத்தினருடன் வந்த 3 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியது அனைவரும் அறிந்ததே. அதுபோல,  அடுத்த சில நாட்களில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியான லக்‌ஷிதாவை சிறுத்தை தூக்கி சென்று கொன்ற செயல் மேலும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, திருப்பதி மலைப்பாதையில் வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு அறிவுறைகள் வழங்கப்பட்டது.  பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இரவு நேரங்களில் திருப்பதிக்கு மலையில் செல்லும் பக்தர்கள் கைகளில் பிரம்பு உள்ளிட்ட தடிகளுடன் செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து, சிறுத்தைகளை பிடிக்க வனகாவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதற்காக,  அலிபிரி மலைப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 320 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இரு சிறுத்தைகளும் பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை வழங்கியுள்ளது.

அலிபிரி மலைப்பாதையில் 7வது மைல், லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பதிவான காட்சிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, திருப்பது தேவஸ்தானம் நிர்வாகம் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மலைப்பாதையில் நடக்கும் போது தனியாக செல்லாமல் குழுக்களாக செல்லும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளது.