சென்னை: தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு, மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவப் பல்கலைக்கழக இணைப்பு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள் பயில்வோருக்கு, வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்தப் படிப்புகளில் செய்முறை, நடைமுறை தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும். தேர்வுகள் நடைபெறும்போது, மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பொதுநல அறிவிப்புகளை கடைபிடிக்க வேண்டும்.

அதுபோன்று பி.பார்ம்., படிப்புகளுக்கான முதல் மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுகள், வரும் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அவை மாற்றியமைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 15ம் முதல் துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.