டெல்லி: அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் . உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? என பிரதமர் மோடிக்கு  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் என, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார்.

நீதித்துறைக்கு அரசியல்  அச்சுறுத்தல் நிலவுவதாக மூத்த வழக்கறிஞர்கள் உள்பட 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடி டிவிட் போட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,

“பிரதமர் மோடி அவர்களே நீங்கள் நீதித்துறை பற்றி பேசுகிறீர்கள்.

1. 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முனன்னெப்போதும் இல்லாத வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி “ஜனநாயகத்தின் அழிவுக்கு” எதிராக எச்சரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். இது உங்கள் ஆட்சியில் நடந்தது. அந்த நீதிபதிகளில் ஒருவர் உங்கள் அரசால் ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். எனவே ‘தீர்மானிக்கப்பட்ட நீதித்துறையை’ விரும்புவது யார்?

2. தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கு உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள் . அவருக்கு ஏன் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது?

3. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) கொண்டு வந்தவர் யார் ? ஏன் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் அது முடக்கப்பட்டது?

மோடி அவர்களே, ஒவ்வொரு அமைப்பும் உங்களால் ‘கொடுமைப்படுத்தப்படுகிறது’. எனவே உங்கள் சொந்த பாவங்களுக்காக காங்கிரஸ் கட்சியின் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்” என கார்கே சாடியுள்ளார்.

‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’! பிரதமர் மோடி டிவிட்..

அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்…