டெல்லி: அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது, இது,  நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது என  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் உள்பட  600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர்.

‘அச்சுறுத்தலில் நீதித்துறை-அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில்  உச்சநீதிமன்ற   தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே, பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பிங்கி ஆனந்த், அதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல் உள்பட 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக உச்சநீதிமன்றம் வழக்கும் தீர்ப்புகள் மற்றும் தலைமைநீதிபதியின் கருத்துக்கள் மீது விமர்சனமும், வரவேற்பும் எழுந்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் அரசின் கொள்கை முடிவுகளின் மீது தேவையின்றி அரசியல் செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,   தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு ‘அச்சுறுத்தலில் நீதித்துறை- அரசியல் மற்றும் தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த  கடிதத்தில்,  2018-2019 ஆண்டு காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது சில சுயநல சக்திகள் கோர்ட்டுகள் மீது செல்வாக்கு செலுத்தவும், அழுத்தம் தரவும் முயன்றனர். தவறான கட்டுக்கதைகளை பரப்ப முயன்றனர். அதேபோல், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் இத்தகைய சுயநல சக்திகள் தங்களது அச்சுறுத்தல் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

அரசியல் வழக்குகளில் குறிப்பாக ஊழல் வழக்குகளில் அரசியல் பிரபலங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அவர்களது நிர்பந்த நடவடிக்கைகள் வெளிப்படை யாக தெரிகிறது. இத்தகைய தந்திரங்கள் நமது நீதிமன்றங்கடிள பாதிப்பதுடன், நமது ஜனநாயக கோட்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.  ”நீதித்துறை செயல்முறைகளைக் கையாளவும், நீதிமன்றத் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிகப்படியாக காண முடிகிறது. இந்த வழக்குகளில் அங்கு நீதிமன்றத் தீர்ப்புகளை திசை திருப்பும் முயற்சிகள் மற்றும் நீதித்துறையை இழிவுபடுத்தும் முயற்சிகள் அதிகம் நிலவுகிறது.

நீதித்துறை சிலருக்காக வளைந்து செயல்படுவதாக தவறான கதைகள் புனையப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள், நீதித்துறை முடிவுகளை பாதிக்கும் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கம் கொண்டவை.

நீதிபதிகள் அடங்கிய அமர்வு நிர்ணயம் செய்யப்படுவதில், அந்த பிரிவினர்  ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர்.  நீதிபதிகளின் ஒருமைப்பாட்டின் மீது அவதூறுகளை ஏற்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் அவமரியாதை மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் கொள்கைகளுக்கு சேதம் விளைவிப்பதாகும்.

சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் நமது நீதிமன்றங்களை ஒப்பிட்டு, நமது நீதித்துறை நிறுவனங்களை நியாயமற்ற நடைமுறைகளுடன் குற்றம் சாட்டுகின்றனர். இவை வெறும் விமர்சனங்கள் அல்ல.  நமது நீதித்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் மற்றும் நமது சட்டங்களின் நியாயமான பயன்பாட்டை அச்சுறுத்தும் நேரடி தாக்குதல்கள் ஆகும்.

அரசியல்வாதிகள் தங்கள் நலன்களைப் பொறுத்து சட்ட விஷயங்களில் நிலைப்பாட்டை மாற்றி, அதன் மூலம் சட்ட அமைப்பின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வாதாடுவதைப் பார்ப்பது விந்தையானது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களின் வழியில் செல்லவில்லை என்றால், அவர்கள் நீதிமன்றத்திற்குள்ளேயும் ஊடகங்கள் மூலமாகவும் நீதிமன்றங்களை விரைவாக விமர்சிக்கிறார்கள். இந்த இருமுக நடத்தை தீங்கு விளைவிக்கும்.  சில சமயங்களில் தங்கள் வழக்குகளில் நீதிபதிகள் யார் என்பது உற்று நோக்கப்படுகிறது மற்றும் நீதிபதிகள் மீது அழுத்தம் கொடுக்க சமூக ஊடகங்களில் பொய்கள் பரப்பப்படுகின்றன.

கடந்த காலம்தான் கோர்ட்டுகளின் பொற்காலம் என்றும், தற்போது அதற்கு முரணான நிலைமை காணப்படுவதாகவும் தவறான தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அதன்மூலம், தங்களது அரசியல் ஆதாயத்துக்காக கோர்ட்டுகளை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு கோர்ட்டுகள் மீதுள்ள நம்பிக்கையை அசைத்து பார்க்கும் வகையில் அவர்களது கருத்துகள் இருக்கின்றன.

அத்துடன், நம் நாட்டு கோர்ட்டுகளை சட்டத்தின் ஆட்சி நடக்காத நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு கீழே இறங்குகிறார்கள். சாதகமான தீர்ப்பு என்றால் அதை புகழ்வதும், எதிரான தீர்ப்பு என்றால் அதை அவமதிப்பதுமாக இருக்கின்றனர். ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு வலிமையாக நிற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து கோர்ட்டுகளை பாதுகாக்க வேண்டும்.

 தேசம் தேர்தலுக்குத் தயாராக இருக்கும் போது, ​​அவர்கள் அதை மிகவும் உள்நோக்கத்துடன் செய்கிறார்கள்.  நீதித்துறையை வெளிப்புற அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த விஷயங்களில், அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு தற்செயலாக அதிக சக்தியைக் கொடுக்கும். இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருவதால், கண்ணியமான மௌனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல,” கடந்த சில ஆண்டுகளாக, இம்முயற்சிகள் நடந்து வருகின்றன. அதுவும் அடிக்கடி நடக்கின்றன. தலைமை நீதிபதியின் தலைமை, கடினமான தருணங்களில் மிகவும் முக்கியம் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கடிதத்தில் 600 வழக்கறிஞர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.