டில்லி

டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சி தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரித் தேர்தல் ஆணையத்தை நாடியது. கடந்த 20.2.2024 அன்று இதற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனுவை நீதிபதி சச்சின் தத்தா விசாரித்து, இதுகுறித்து உடனடியாக முடிவு எடுத்து அறிவிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

ஆயினும் விசிகவுக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.   ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீண்டும் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு மனுவை நீதிபதி சச்சின் தத்தா ஏப்ரல் 1 ஆம் தேதி விசாரிக்க உள்ளார்.