சென்னை: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் மறைந்த நடிகை ‘சித்ராவின்’ கணவர் ‘ஹேம்நாத்’ மீண்டும் ‘கைது’  செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர், மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையில், இந்த தற்கொலையானது, வரதட்சணை கொடுமையால் நடைபெறவில்லை என்று உறுதிசெய்யப்பட்டது. இருந்தாலும், அவரது தற்கொலை விசாரணை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில்,  சித்ரா தனது திருமணத்தை  மிக விமரிசையாக தனது திருமணத்தை நடத்த  திட்டமிட்டிருந்த நிலையில்,  அவரும்  ஹேம்நாத்தும், பதிவு செய்துகொண்ட விவரமும் வெளியானது. இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது.  தொடர் விசாரணையை அடுத்து ஹேம்நாத் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், ஹேம்நாத் ஏற்கனவே பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்திருந்ததும் காவல்துறையில் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்போது . பண மோசடி செய்த புகாரின் பேரில்  ஹேம்நாத் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர்,  கடந்த 2015 ஆம் ஆண்டு, இருவரிடம் இருந்து மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் வரை ஹேம்நாத் மோசடி செய்துள்ளதாகவும், அது தொடர்பான புகாரின் பேரில் ஹேம்நாத்தை காவல்துறையினர் கைது செய்து,  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.