டில்லி

டந்த 2022-23 ஆம் ஆண்டில் 2900க்கும் அதிகமான மருந்துகள் தரமற்றவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது 

கடந்த 2022-23 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 89,729 மருந்துகள் பரிசோதிக்கப்பட்டதில் அதில் 2,921 மருந்துகள் “தரமானதாக இல்லை” என்றும், 422 மருந்துகள் போலியானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மாநிலங்களவையில்,

”கடந்த 2022-23 ஆம் ஆண்டில் போலியான மருந்துகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

‘ தரம் இல்லை’ என அறிவிக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட புகார்கள், விமர்சனங்கள் வைத்து சில நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டில் ஒப்பிடும் போது 88,844 மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன, அவற்றில் 2,545 தரமானவை அல்ல என்றும் 379 போலியானது என்றும் கண்டறியப்பட்டது. 

கடந்த ஆண்டு போலியான / கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளைத் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தது தொடர்பாக 592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” 

எனத் தெரிவித்துள்ளார்.