டில்லி

சென்ற மாதம் ஜி எஸ் டி வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

.

தொடர்ந்து இந்தியாவில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருகிறது. கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்குச் சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்குக் கீழ் இருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21 ஆம் நிதியாண்டுக்குப் பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, கடந்த 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்தது.

தற்போது மத்திய நிதியமைச்சகம் ஜனவரி 2024-ல் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல் ரூ. 1,72,129 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஜனவரியில் வசூலிக்கப்பட்ட ரூ. 1,55,922 கோடி வருவாயைக் காட்டிலும் 10.4 சதவீதம் அதிக வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வசூலாகும். இந்த நிதியாண்டில் மூன்றாவது மாதமாக ரூ. 1.70 லட்சம் கோடி அல்லது அதற்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்த .ஜி.எஸ்.டி. வசூலில் இருந்து சி.ஜி.எஸ்.டி.க்கு ரூ. 43,552 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கு ரூ. 37,257 கோடியும் அரசு அளித்துள்ளதாக நிதி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 2023 – ஜனவரி 2024 காலகட்டத்தில், ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வசூல் ஆண்டுக்கு ஆண்டு 11.6 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.  முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வசூலான ரூ.14.96 லட்சம் கோடியிலிருந்து ரூ.16.69 லட்சம் கோடியை எட்டியது. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரலில் 1.87 லட்சம் கோடியாக அதிகபட்ச மாத ஜி.எஸ்..டி வசூல் பதிவு செய்யப்பட்டது.