பாட்னா
தங்களின் இல்லக் காவலை அரசு விலக்கிக் கொண்டதால் மாநிலக் காவல் துறையினரை லாலுவின் மனைவியும் மகன்களும் திருப்பி அனுப்பி உள்ளனர்.
பீகாரின் முன்னாள் பிரதமர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவர் மனைவி ராப்ரி தேவி ஆகியோர் பாட்னாவில் வசித்து வந்தனர். தற்போது லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் + காவல் இவர்களுக்கும் தொடர்ந்து வந்தது.
தற்போது லாலு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது இல்லத்தில் ஐஆர்டிசி உணவு விடுதி ஊழல் வழக்கில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது. ராப்ரி தேவி, “சிபிஐ எங்கள் இல்லத்தில் விசாரணை மேற்கொண்ட சில மணி நேரங்களில் எங்கள் வீட்டுக்கு அளிக்கப்பட்ட 32 காவலர் படை விலக்கிக் கொள்ளப் பட்டது. வீட்டுக் காவல் இல்லாத நிலையில் தனிப்பட்ட காவல் தேவை இல்லை என நாங்கள் மாநில காவல் துறையினரை திருப்பி அனுப்பி விட்டோம். லாலுவின் குடும்பத்தினரை கொல்ல பாஜக சதி செய்கிறதோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. எங்களைக் கடவுள் காப்பாற்றுவார். மக்களும் கட்சித் தொண்டர்களும் அந்த கடவுளின் பிரதிநிதிகளாக எங்களை காத்து வருகின்றனர்” எனக் கூறி உள்ளார்.
மேலும் ராப்ரி தேவியின் மகன்களான தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் தங்களுக்கு அளித்துள்ள மாநிலக் காவல் துறை பாதுகாப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டனர். “நடு இரவில் முதல்வர் நிதிஷ்குமாரும் அவருடைய கூட்டாளியான பாஜகவினரும் எங்கள் வீட்டுக் காவலை திரும்ப பெற்றுள்ளனர். இந்நிலையில் எங்களுக்கு மாநிலக் காவல் துறையின் தனிப்பட்ட பாதுகாப்பும் தேவை இல்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட காவலர்களை நாங்கள் திரும்ப அனுப்பி விட்டோம். நிதிஷ்குமார் ஜி க்கு மேலும் காவல் தேவைப்படும். அவர்களையும் உபயோகப் படுத்திக் கொள்ளட்டும்” என தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.