பாட்னா: 
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுலும், லாலுவும் சந்தித்ததால் பீகார் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் (தாராபூர் மற்றும் குஷேஸ்வர் இடம்) இரண்டு சட்டசபை இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கு ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இடையே உடன்பாடு இல்லை. இந்த இரண்டு கட்சிகளும் இரண்டு தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அண்மைக் காலங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. RJD தலைவர் லாலு யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டணியின் இந்த இரண்டு முக்கிய கட்சிகளுக்கிடையே நடக்கும் இந்த மோதலுக்கு இடையே சந்தித்துள்ளனர்.
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) நிறுவனருமான மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் முதலாமாண்டு நினைவு தினம் டெல்லியில் கடைபிடிக்கப்பட்டது. ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு யாதவ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இரங்கல் கூட்டத்தில் ராகுலும், லாலுவும் அருகருகே அமர்ந்து இரு தலைவர்களும் சுமார் 15 நிமிடங்கள் பேசினர்.
இரு தலைவர்களுக்கிடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றாலும், இந்த சந்திப்பு பீகாரில் இடைத்தேர்தலுக்கு முன்பாக அரசியலை மேலும் சூடாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.