பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. நவம்பர் 10ம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் எம்எல்ஏவான சதீஷ் யாதவை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் போட்டியிடுகிறார்.
இதுபற்றி தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: தொகுதி மக்கள் எங்களை தேர்வு செய்வார்கள். மக்கள் அனைவரும் லாலு பிரசாத் இல்லாமல் தவித்து வருகின்றனர். அடுத்த 2 நாள்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன். தேர்தலில் வென்று நாங்கள் ஆட்சியமைப்போம் என்றார்.