பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் அண்மையில் முடக்கினர். குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்த அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டன.

குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ‘ப்ரையன்’ என்று பெயர் மாற்றப்பட்டது. அவரது புகைப்படங்கள் அடங்கிய ஏராளமான ட்வீட்கள் அழிக்கப்பட்டதுடன் அவரது கணக்கில் இருந்து சில பதிவுகளும் செய்யப்பட்டன.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திர பாபுவிடம் குஷ்பு புகார் அளித்தார். இதையடுத்து, குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஹேக் செய்தவர்கள் யார் என்பதன் விவரங்கள் தெரியவரவில்லை.

இந்த நிலையில், தனது ட்விட்டர் கணக்கை பாதுகாப்புடன் மீட்டுக் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், புதிதாக முகப்பு புகைப்படத்தையும் தற்போது மாற்றியுள்ளார்.