திண்டுக்கல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 24ந்தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார். அதன்படி,  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24ஆம் தேதி 29 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடை பெறும் என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

மலைகளின் இளவரசியும் கோடை வாசஸ்தலமுமாகிய,  கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.  ஆனால்  கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்படவில்லை.   தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால், இந்த ஆண்டு அனைத்து விதமான விழாக்களுக்கும் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.  அதன்படி கொடைக்கானலில் திட்டமிட்டபடி கோடைவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து கொடைக்கானல்  கோடை விழா வரும் (மே) 24ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சியும் 24ந்தேதி முதல் 29 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண ‘உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் கொடைக்கானலில் தற்போதே அனைத்து தங்கும் விடுதிகளும் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணக்காக மலர்செடிகள் பூத்துக்குலுங்கி காண்போரை வசிகரித்து வருகிறது.ரோஜா தோட்டத்திலும் பல்வேறு வகையான ரோஜா பூக்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன. தற்போதே அங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் விசாகன், இந்த வருடத்திற்கான கோடைவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கு வதாகவும், 24ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர் கண்காட்சி நடைபெறுகிறது.  தொடர்ந்து,  ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடைபெற உள்ளது. இந்த விழா நாட்களில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, வாத்து பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவித்தார்.