மும்பை: நாடு முழுவதும் இன்றுமுதல் ஏ.டி.எம். கட்டணம் உயர்கிறது.  அதன்படி குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதை இந்திய ரிசர்வ் வங்கியும் உறுதிப்படுத்தி உள்ளது.

2022ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் வங்கி நடைமுறை உள்பட பல்வேறு அரசு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் 5 முறைக்கு மேல்  வங்கிகளில் பணம் எடுத்தால் அதற்கும் கட்டணம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிமாற்றங்களை (நிதி அல்லது நிதி சாரா பரிமாற்றங்கள்) செய்ய முடியும். அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்துக்கு அப்பால் நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரூ.20 கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் இன்று (ஜனவரி 1, 2022ம் ஆண்டு சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ரூ.20-க்கு பதிலாக ரூ.21 ஆக இது அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

ஏ.டி.எம். பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி தேவை அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.