டில்லி

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து ஏதும் பேச விரும்பவில்லை என மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று வரை இதனால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இன்று மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கார்கே செய்தியாளர்களிடம்,

“மத்திய அரசு எங்களை நாடாளுமன்றத்தில் பேச விடாததால் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறோம். மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் பிரதமர் எங்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை.

இது குறித்து எதிர்க்கட்சிகள் இது குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை என்பது போல பாஜகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். உண்மையில் நாங்கள் கடந்த 11 நாட்களாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் காத்திருக்கிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.