டில்லி

த்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இருந்து தப்பிக்க வங்கியைக் கேடயமாக பயன்படுத்துவதாக கார்கே கூறி உள்ளார். 

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது.  மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியைக் கேட்டுக்கொண்டது.

இந்த விவரங்களை எடுக்க நேரம் ஆகும் என்பதால், கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கக்கோரி, ஸ்டேட் வங்கி நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. பாரத ஸ்டேட் வங்கி அணுகுமுறையை வைத்து மத்திய அரசைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே,

“உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் கருப்புப் பணத்தைக் குவிக்கும் மோடி அரசின் திட்டத்தை ரத்து செய்து மார்ச் 6 ஆம் தேதிக்குள், நன்கொடையாளர்கள் விவரங்களை அளிக்குமாறு கூறியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு, அதாவது ஜூன் 30 ஆம் தேதி வாக்கில் சமர்ப்பிக்க பா.ஜனதா விரும்புகிறது. 

பாஜக மோசடியான தேர்தல் பத்திர திட்டத்தால் பெரிதும் பலன் அடைந்துள்ளது. மோடியின் பணக்கார நண்பர்களுக்கு நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையம், மின்நிலையங்கள் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டு, அவற்றுக்குப் பிரதிபலனாகத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டுள்ளது. 

எனவே இந்த பேரங்களை மறைக்க பாரத ஸ்டேட் வங்கியை மோடி அரசு கேடயமாகப் பயன்படுத்துகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தகர்க்க வங்கியைப் பயன்படுத்துகிறது. வெறும் 24 மணி நேரத்தில் நன்கொடையாளர்கள் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகையில் ஸ்டேட் வங்கிக்கு எதற்காக 4 மாதங்கள் தேவைப்படுகிறது?” 

என்று கூறியுள்ளார்.