திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் விற்கும் சவர்மாவை பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அந்தவகையில்,இரு தினங்களுக்கு முன்னர் இந்த உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்,வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் கெட்டுப்போன சிக்கன் சவர்மா கொடுக்கப்பட்டதால்தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து,உணவகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு,சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை கேரளா அமைச்சர் எம்.வி.கோவிந்தன் நேரில் பார்வையிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் தரமான உணவு வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.