திருவனந்தபுரம்

ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியதால் கேரள மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஓணம் பண்டிகைக்கு உலகின் பல பகுதிகளில் இருக்கும் கேரள மக்கள், தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.

ஓணம் பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.  இவ்வாண்டுக்கான ஓணம் பண்டிகை கொண்டாட்டம், ஆவணி அஸ்தம் நட்சத்திர நாளான இன்று தொடங்கியது.

கேரளாவில் ஓணம் பண்டிகை தொடக்கம் கோலாகலமாக நடைபெற்றது. கேரளப் பெண்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

வரும் 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாட்டமாக மகாபலி ராஜாவைப் பூவுலகுக்கு வரவேற்கும் விதமாகப் பூக்களால் வீடுகளில் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.  வரும் 29 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.