திருவனந்தபுரம்

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் எனக் கேரள தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே அவர் தமிழக தலைமைச் செயலரைக் கேரள மாநிலத் தலைமைச் செயலருடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

தமிழக தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, கேரள மாநிலத் தலைமைச் செயலர் வி.வேணுவிடம் தொலைப்பேசி மூலம் கேட்டுக் கொண்டார்.

தமிழக தலைமைச் செயலர் மூலம் வந்த தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் தமிழக ஐயப்ப பக்தர்களுக்குக் கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.