டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் தேதி டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கடந்த 22-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் முன்னிறுத்தினர். சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில், மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக வாதிடப்பட்டது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த கே.கவிதா ஆகியோருடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டில் தனக்குத் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி, கெஜ்ரிவாலை 28-ந் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.  இன்றோடு இது அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் முன்னிறுத்தப்பட்டார்.

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு 7 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.  எனவே அரவிந்த் கெஜ்ரிவாலை 4 நாட்கள் (வரும் 1ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.