பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர் இந்தியாவுக்கு விமானங்களை குத்தகைக்கு எடுத்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பிரஃபுல் படேல் மீது 2017-ம் ஆண்டு சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்தது.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை சுமார் ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைப்பதாக சிபிஐ அறிவித்துள்ளது.

அஜித் பவாருடன் இணைந்து சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வரும் பிரஃபுல் படேல் மீதான இந்த வழக்கு முடிவுக்கு வந்திருப்பதை அடுத்து அவர் அப்பழுக்கற்றவர் என்று நிரூபணமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.