டில்லி

நாடெங்கும் உள்ள 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த  2006 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களால் 100 நாள் வேலை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு தற்போது அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சகம் இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தைத் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(c)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது . தற்போது 100 நாள் வேலைக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணைப்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலைக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தமிழகம், புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் இது ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஊதிய விவரங்களின்படி அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் ரூ.374 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.