புதுடெல்லி

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறை கண்காணிப்பாளருக்குச் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிதிமன்றம் சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க அனுமதி அளித்தும் திகார் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை என்றும், இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்லச் சதி நடப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் திகார் சிறையின் வெளியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திகார் சிறையில் தனது கணவரைக் கொல்லச் சதி நடப்பதாக  அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று ஜார்க்கண்டில் நடைபெற்ற கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.

கெஜ்ரிவால் திகார் சிறைக் கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலைத் தெரிவித்துள்ளது. என் சர்க்கரை அளவு ஒரு நாளைக்கு மூன்று முறை மிக அதிகமாக உள்ளதால், நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன். ஆனால் திகார் சிறை நிர்வாகம் நான் இன்சுலின் கேட்கவில்லை என்ற அறிக்கையைச் செய்தித்தாளில் வெளியிட்டுள்ளது. அதைப் படித்ததும் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். எனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்ததும் தவறானது” 

என்று குறிப்பிட்டுள்ளார்.