டெல்லி
ஆம் ஆத்மி கட்சியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
வரும் 5 ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
நேற்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு,
“பெண்களுக்கான நலத்திட்டங்கள், மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், டெல்லி பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500 வழங்கப்படும். 2021-ம் ஆண்டில், மாதம் ஒன்றிற்கு ரூ.2,100 வழங்கப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. ஆனால், டெல்லியிலோ, பஞ்சாப்பிலோ அவர்கள் அதனை வழங்கவில்லை.
2024-ம் ஆண்டில் மாதத்திற்கு ரூ.1,000 வழங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போன்றே வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதிலும் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து விட்டது”
எனக் கூறினார்.
இது குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால்,
“எங்களுடைய நிர்வாக மாதிரியை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. அவர்களுக்கு என்று எந்தவித யோசனைகளோ அல்லது தொலைநோக்கு பார்வையோ இல்லை ”
என்று கூறியுள்ளார்.