சண்டிகார்
மத்திய அரசு வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பஞ்சாபில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கு, அரசு சட்டப்படியான உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 11 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.
மேலும் இந்த குழுவினர் சந்தித்து பேசிய விவசாய சங்க தலைவரான ஜகஜித் சிங் தல்லேவால் என்பவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த போராட்டம் இன்று 55-வது நாளை எட்டியுள்ளது நிலையில், விவசாயிகளுடன் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் சண்டிகாரில் கூட்டம் நடைபெறும் எனவும் அதில், விவசாயிகளுடன் மத்திய அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.