அத்தியாயம்: 21                                                        சுகன்யா

ழகின் இலக்கணம் அவள்.  பெயர் சுகன்யா.  அல்லியும், தாமரையும் பூத்துக் கிடந்த தடாகத்தில் தானும் ஒரு பூவாகிக் குளித்தாள்.  பூக்களையும், அதைத் தாங்கும் மரங்களையும் தவிர இந்த வனத்தில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் நெகிழ்ந்து போன ஈர ஆடையைப்பற்றி கவலைப்படவில்லை.  குளித்து முடித்து கரையேறினாள்.

நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள வைதூர்ய மலைக்குப் போனால், தேவர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்கும் மூலிகை கிடைக்கும் என்று நாரதர் சொன்ன வார்த்தையை நம்பி பூலோகம் வந்த அசுவினி தேவர்கள் இருவரும் ஆடை மாற்றும் சுகன்யாவின் அழகைக் கண்டனர்.  பூமிக்கு வந்த விஷயம் மறந்து போயிற்று.

‘இந்திரன் மகளையும்அழகில் மிஞ்சிவிட்ட இவள் யார்?” என்ற கேள்வி இருவர் மனதையும் குடைந்தது.  பெண் அரை நிர்வாணமாய் நிற்கிறாளே.  அதை ரசிப்பது தவறு என்று அசுவினி தேவர்கள் நினைக்கவில்லை.  திருட்டுத்தனமாய் ரசிப்பதை அவள் ஆடை உடுத்தி முடிக்கும் வரை அவளுக்குத் தெரியாமலாவது தொடருவோம் என்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாத தேவர்கள் அவள் எதிரில் போய் நின்றனர்.

புதிய ஆடவர்களை எதிர்பார்க்காத சுகன்யா அவசரமாய் ஆடைகளை உடம்பில் அள்ளிப் போட்டுக் கொண்டாள்.  அவள் கண்களில் ஆச்சர்யமும் அச்சமும் குடியேறியது.  வெட்கம் மேல் விழுந்து அமுக்கியது.

“தேவலோகப் பெண்களை தோற்கடிக்கும் அழகுடன் மிளிர்கிறாயே.. நீ யார் பெண்ணே?”

வெட்கத்திலும் கண்களை நிமிர்த்திப் பார்த்தாள்.  மொய்க்கின்ற ஈக்களும் ஆண்களின் கண்களும் ஒரே ஜாதிதான் என்று நினைத்துக் கொண்டாள்.

‘என்னை தேவலோகப் பெண்களோடு ஒப்பிடுகிறார்களே, அப்படியானால், இவர்கள் தேவர்களா? ஒரு பெண் குளிக்கிற இடத்துக்கு அன்னிய ஆண்மகன் வரக்கூடாது என்கிற இங்கிதம் தெரியாதவர்களா தேவர்கள்… ஒருவேளை தேவலோகத்தில் நடைமுறையே இப்படித்தானோ..’

“என்ன யோசனை பெண்ணே.. ஏன் பதில் சொல்ல மறுக்கிறாய்..?”

“நான் சர்யாதி மன்னனின் மகள். சயவன முனிவரின் மனைவி.”

“ஏது.. உனக்கு திருமணம் ஆகிவிட்டதா? சயவன முனி உன் புருஷனா? உன் தந்தை மன்னன் என்கிறாய்.. அந்தக் கிழவனுக்கு உன்னை எப்படி திருமணம் செய்து வைத்தார்? இத்தனை அழகுடைய உன்னை திருப்திபடுத்தும் தகுதி சயவனருக்கு ஏது? உன் பூரிக்கும் இளமையை இந்த வனத்தில் இருந்து வீணாக்கிக் கொள்ளாதே.  உன்னுடைய இந்த அழகு முனிவருக்கு பணிவிடை செய்து மடிவதற்கு, படைக்கப்பட்டதில்லை.  சயவனரை விட்டு விடு.  எங்களில் ஒருவரை கணவனாக்கிக் கொள்” என்றனர்.

ஆயுசுக்கும் சயவன முனிவருக்கு அடிமை வேலை செய்ய சுகன்யாவுக்கு மட்டும் ஆசையா என்ன? தன் மீது காமன் விடும் அம்புகளுக்கு பதில் சொல்லக் கூடிய சுத்த வீரன் தனக்கு கணவனாக வாய்க்க வேண்டும் என்றுதான் கல்யாணத்துக்கு முன்பு கனவு கண்டாள்.  ஆனால் நடந்தது எல்லாம் வேறு.

இன்பத்தைத் தவிர, இன்னொன்று அறியாத பருவம் அது.  தன் தோழிகளோடு நர்மதை ஆற்றில் நீராட வந்த சுகன்யா கரை நெடுகிலும் பூத்துக் கிடந்த பூக்களிடம் மனதை பறிகொடுத்தாள்.  பூக்களை ரசித்தவாறே நடந்தாள்.  இயற்கை பார்க்கப் பார்க்க அலுக்காத அழகு.  வெகுதூரம் வந்துவிட்டாள்-தோழிகள் இல்லாமல் தனியாக.

அந்த இடம் ஒருதபோவனம்.  அங்கே சயவன முனிவர் தவம் இருப்பதோ, அவரைச் சுற்றி கரையான் புற்று கட்டியதோ சுகன்யாவுக்கு தெரியாது. அவள் நடக்கும் போது கால் சலங்கை ‘கலீர் கலீர்’ என்றன.

நீண்ட காலமாக சிவனை நோக்கி தவம் செய்யும் சயவனரின் தவம் சலங்கை ஒலியிடம் தோற்றது.  மனசு கடவுளை மறந்து, சலங்கை சத்தம் இங்கே எப்படி என்று ஆராய்ந்தது. கண்களைத் திறந்தார்.  சுகன்யாவைக் கண்ட சயவனருக்கு சிறகு முளைத்தது.  எப்போதும் கண் எதிரில் சுகன்யா இருக்க வேண்டும்.  பொழுதெல்லாம் அவளுடன் பேசி இன்புற வேண்டும்.  என்ற ஆசையில் கட்டுண்டார்.  அவள் நடையழகை ரசித்தார்.  கடவுளை தரிசிக்க தவமிருந்தவர் கன்னியின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ந்தார். ‘பெண்ணே’ என்று மெல்ல அழைத்தார்.

சுகன்யா சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்.  கரையான் புற்றுதான் அங்கே இருந்தது.  கரையான் புற்று பேசுகிறதா? ஆச்சர்யத்தால் அவள் கண்கள் விரிந்தது.  புற்றுக்குள் இருந்து மின்னிய சயவனனின் கண்களை ‘ஏதோ விசித்திரமான பிராணி’ என்று நினைத்த சுகன்யா பக்கத்தில் கிடந்த முள்ளை எடுத்து அதை குத்திப் பார்த்தாள்.  சீண்டிய பிராணி சீறிவிட்டால்? பயம் நெஞ்சை மிரட்ட அங்கிருந்து விடுவென ஓடி வந்து விட்டாள்.

சயவனருக்கு கோபம் வந்தது.  ஏற்கனவே அவர் கோபக்காரர் கோபம் வந்தால் உடனே சாபம் கொடுப்பதுதானே முனிவர்களின் வழக்கம்? சாபம் கொடுத்தார்.  சாபம் சுகன்யாவுக்கல்ல.  இந்த வனத்தை காவல் காக்கும் வீரர்களுக்கு.

இந்த வனத்துக்குள் அடுத்தவர் நுழைந்து விடாதபடி சரியாக காவல் காத்திருந்தால் தனக்கு இப்படியொரு இடையூறு நேர்ந்திருக்காது என்பது சயவனர் பக்க நியாயம்.

நியாயம்தானே? சுகன்யாவின் மேல் ஒருவிதமான அன்பு ஏற்பட்டு விட்டதால் அவளை சபிக்க மனசு இடம் தராதில்லையா?

ஒரு பாவமும் அறியாத படை வீரர்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடுவதும், திரும்பி வருவதும், ஓடுவதுமாக இருந்தார்கள்.

மன்னன் சாயாதியை கவலை சூழ்ந்தது.  அது எப்படி ஒரே நேரத்தில் எல்லோருக்கும் வயிற்றுப் போக்கு உண்டாகும்? அதுவும் காவல் வீரர்களுக்கு மட்டும்? காரணம் தேடி மன்னன் சோர்ந்து போனான்.

படைவீரர்களின் அவஸ்தையும், தந்தையின் மன வருத்தத்தையும் கண்ட சுகன்யா, தவபோவ னத்தருகே போனதையும், அங்கே பெரிய மின்மினிப்பூச்சியைக் கண்டதையும்.. அதைக் குச்சியால்  சீண்டியதையும் சொல்லி ‘அதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா அப்பா?” என்று கேட்டாள்.

முனிவரின் கண்களைத்தான் பெண் மின்மினிப்பூச்சி என்று சொல்கிறாள் என்பதை அறிந்த அரசன் புற்றை நோக்கி விரைந்தான்.  தவத்தாலும், வயதாலும் தன்னைவிட முதிர்ந்த சயவன முனிவரை வணங்கினான்.  “என் மகள் சுகன்யா அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும்.  வீரர்களுக்கு விமோசனம் வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.

அந்த சுதந்தர நிலவின், பெயர் சுகன்யாவா? மனசுக்குள் உட்கார்ந்து காதல் பாடும் சுகன்யாவை அடைய இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைத்த சயவனர். “மன்னா, உன் மகள் அரசன் மகள் என்ற மமதையில் எனக்கு தீங்கிழைத்து விட்டாள்.  அவள் கொழுப்படங்க வேண்டுமானால் இவள் முனிவனுக்கு மனைவியாகி காட்டில் தங்கி பணிவிடை செய்ய வேண்டும்.  ஆகவே, நான் அவளை மனம் புரிந்து கொழுப்பை அடக்கலாம் என்றிருக்கிறேன்.   நீ இதற்கு சம்மதித்தால் வீரர்களை சாபத்திலிருந்து விடுவிப்பேன்” என்றார்.

நாட்டின் நலன் கருதி மன்னன் மகளை முனிவனுக்கு மனைவி யாக்க சம்மதித்தான்.  சுகன்யா சயவனரின் பத்தினியானாள்.  பாதி ராத்திரியில் குளிர்ந்த நீரில் குளிப்பது இப்போதெல்லாம் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது.

‘இயலாத கிழவனுக்கு எதற்கு மனைவி’ என்று கேட்டு இப்போது கூட தபோவனத்தை விட்டு வெளியேறி விடுவாள்.  பயம் அவள் கால்களை கட்டிப் போட்டிருக்கிறது.  தன் நாட்டு மக்களுக்கு மீண்டும் தன் புருஷ முனி சாபம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம்.  அந்தப் பயம் மட்டும் இல்லை என்றால்..

“என்ன பெண்ணே யோசனை? எங்களில் ஒருவரை கணவராக வரித்துக் கொள்.  வனம் விட்டு வா.  வானுலகம் போய்விடலாம்.” அசுவினி தேவர்கள் இருவரும் சுகன்யாவுக்கு ஆசை வார்த்தையால் தூபம் போட்டனர்.

அசுவினி தேவர்களின் ஆசையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையிலிருந்த சுகன்யா, “அந்த நினைப்பை மறந்து விடுங்கள்.  நீங்கள்  நினைப்பதுபோல் நான் என் கணவருக்கு பணிவிடை மாத்திரம் செய்து கொண்டிருக்கவில்லை.  அவரோடு இன்பமாகவும் இருக்கிறேன்” என்றாள்.  தேவை என்று வரும்போது பொய் சொல்லித்தானே தீர வேண்டியிருக்கிறது.

“பெண்ணே, நாங்கள் இருவரும் தேவர்கள்.  தேவர்களின் மருத்துவர்கள்.  உன் கணவரை அழகுள்ள வாலிபனாக மாற்றுகிறோம்.  எங்கள் மூன்று பேரில் ஒருவரை கணவனாய் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இது எங்களுக்கு நீ செய்யும் பதிலுதவி” என்றனர்.

“உங்கள் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. இதைப்பற்றி நானாக எந்த முடிவுக்கும் வர முடியாது.  என் கணவரைத்தான் கேட்க வேண்டும்”என்றாள்.

“உன் விருப்பப்படியே ஆகட்டும்.  நீ போய் உன் கணவரிடம் கேட்டு வா” என்று அனுப்பினர் அந்தத் தேவர்கள்.

ஆசையும் பயமும், நெஞ்சை மாறி மாறி தைக்க தயங்கித் தயங்கி தபோவனத்துக்குள் நுழைந்த சுகன்யா கணவனிடம் அசுவினி தேவர்கள் சொன்னதை ஒப்புவித்தாள்.

கண்களை மூடி, செவி மடுத்து சயவனர் “உன் விருப்பம்” அவசரமாய் மறுத்தாள் சுகன்யா.  சிரித்துக் கொண்ட சயவனர், “என் விருப்பமென்றே வைத்துக் கொள்”என்றார். சுகன்யாவிடம் கொட்டிக் கிடக்கும் அழகை அழகிய வாலிபனாக மாறி அனுபவிக்க கசக்கவா செய்யும்?

தன் கணவர் அசுவினி தேவர்களின் யோசனைக்கு மறு யோசனை இன்றி உடன்பட்டதை அசுவினி தேவர்களிடம் போய் சொன்னாள் சுகன்யா, ‘அப்படியானால், உன் கணவர் இந்தக் குளத்தில் மூழ்கி எழவேண்டும்’ என்றனர்.  சயவனர் குளத்தில் இறங்கி மூழ்கிய உடனே, அசுவினி தேவர்களும் குளத்தில் இறங்கி மூழ்கினர்.  நேரம் ஓடிக் கொண்டிருந்தது.  சுகன்யாவின் மனசு அடித்துக் கொண்டது.

சிறந்த இளமையும், அழகிய ஆடை அணிகலனும் பூண்டு மூன்று பேரும் குளத்திலிருந்து வெளியேறினர்.  இதில் யார் சயவன், யார் அசுவினி தேவர் என்று அடையாளம் தெரியவில்லை.  மூன்று பேரும் ஒரே உருவத்தில் இப்படி வெளியேறுவார்கள், என்று சுகன்யா நினைக்கவில்லை.

மூன்று பேரையும் நன்றாக உற்றுநோக்கினாள் சுகன்யா.  ஒரு வித்தியாசமும் காண முடிய வில்லை.  அதனால் என்ன? ஓடிப்போய் இவர்தான் என் புருஷன் என்று மூன்று பேரில் ஒருவரைத் தொட்டாள்.

அது சுகன்யாவின் அதிர்ஷ்டமோ.. துரதிஷ்டமோ.. அவர் சயவனராகவே இருந்தார்.  தன் மனைவி சுகன்யா தன்னை சரியா அடையாளம் காட்டிவிட்ட சந்தோஷம் ஒருபக்கம்.. இளமை உருவம் கிடைத்துவிட்ட ஆனந்தம் ஒருபக்கம். ..

“அசுவினி தேவர்களே! கிழவனாக இருந்த என்னை நீங்கள் வாலிபனாக ஆக்கினீர்கள்.  நல்ல அழகையும் தந்தீர்கள்.  யாகம் நடைபெறும்போது ஸோமரச பானம் அருந்த மருத்துவர்களான உங்களுக்கு அனுமதி கிடையாதல்லவா? அதை நான் உங்களுக்கு பெற்றுத் தருகிறேன்.  நீங்களும் யாகம் நடக்கும்போது மற்ற தேவர்களைப் போல் இனி ஸோமரசபானம் தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம் இது சத்தியம்” என்றார்.

இதைக் கேட்ட அசுவினி தேவர்கள் சுகன்யாவை இழந்த துக்கம் ஒரு புறம் தொண்டையை அடைத்தாலும் சந்தோஷம் அடைந்தனர்.  தேவ லோகத்தில் தேவர்கள் எல்லோரும் மது அருந்தலாம். மயங்கிக் கிடக்கலாம்.  மயக்கம் தெளிவிக்க வேண்டிய மருத்துவர்களும் மதுவில் மயங்கி விட்டால் காரியம் கெட்டுவிடும் என்று எப்போதுமே அசுவினி தேவர்களுக்கு ஸோமரசபானம் தாராளமாய் தருகிறேன்” என்றான்.

குடிபழக்கம் இல்லாத அசுவினி தேவர்கள் – குடிகாரர்களாக மாற அச்சாரம் போடப்பட்டது.

“நான் சயவன முனிவரின் மனைவி” என்று சுகன்யா சொன்ன பிறகும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்ட அசுவினி தேவர்களுக்கு சயவனர் தந்திருப்பது வரமா? சாபமா? என்பது தெரிய முடியாத குழப்பத்தில் சுகன்யா நின்றாள்.

யாகத்துக்காக ஏற்பாடுகள் துவங்கின.

விருந்தினன் குலப்பெண்களை விருந்தாகக் கேட்கலாமா? இதைப் பற்றி நான்கு வேதத்திலும் என்ன சொல்லி வைத்திருக்கிறார்களே – கேட்டு அறிந்து கொள்ளப் பக்கத்தில் பண்டிதர்களும் இல்லை.

வேறு எதை வேண்டுமானாலும் தருவதாகக் கூறியும் அந்தணன் ஏற்கவில்லை.  அவன் தேவையை அடைவதில் உறுதியாக இருந்தான்.  ஏகவதிக்கு வேறு வழி தெரியவில்லை.

அவன் பக்கத்தில் போய் அமர்கிறாள்.  தலை குனிந்து இருந்ததால் – சுருண்ட நீண்ட கூந்தல் கொத்து ? சந்திரக் கிண்ணம் கிரகணம் வந்ததுபோல் மூடுகிறது.  இந்த உடம்பு வெண்ணெயில் செய்யப்பட்டதா என்று அவனுக்குள் கேள்வி.  சோதித்துவிட வேண்டியதுதான்.

தொட்டு  – இழுத்து உரிமையோடு தொடருகிறான்.

ஒரு கட்டு சமித்தை சுமந்து கொண்டு சுதர்சனன் வருகிறான்.  அவன் வருகை அறிந்து ஓடி வந்து வரவேற்றும் மனைவியைக் காணாத காரணத்தைப் புரிய முடியவில்லை.  வாசலுக்கு வெளியே நின்று ‘ஏகவதி’ என்கிறான்.

‘நான் இப்போது ஏகவதி இல்லை சுவாமி.  விருந்தினனோடு தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் எச்சில்வதி’ என்று சொல்ல வாயெடுக்கிறாள். அதற்குள் அந்தணன் முந்திக் கொள்கிறான்.

“சுதர்சனனே! நான் அந்தணன்.  விருந்தினனாக வந்திருக்கிறேன்.  உன் மனைவியை விருந்தாகக் கேட்டேன்.  அவள் இணங்கி என்னோடு இருக்கிறாள்” என்கிறான்.

‘அடே பாதகா – விருந்தினன் என்ற போர்வையில் வந்த இழி மகனே – என் மனைவியை களங்க மாக்கிய கழுசடையே’ என்று ஆவேசமாய் பாய்வான்.  ‘இல்லற தர்மமாவது – மண்ணாவது’ என்று சீறுவான்.  உடனே பாசக் கயிற்றை வீசிப் பிடித்து விடலாம்’ என்று யமன் பின்னால் தயாராக நிற்கிறான்.

சுதர்சனன் ‘எமனை வெல்வேன்’ என்று சொன்ன நாளிலிருந்து சுதர்சனனை வென்றாக வேண்டிய கட்டாயம் எமனுக்கு ஏற்பட்டு விட்டதால் – பின்னாலேயே அலைகிறான் – எருமை மாட்டோடு.

சுதர்சனன் பெரியதாய்ப் பேசிய இல்லற தர்மத்தையே பழித்து உயிர் விடுகிற காட்சியைப் பார்க்க கண்விரித்து நிற்கின்றனர் முனிவர்கள்.

எமன் பாசக்கயிற்றை கையில் எடுத்துக் கொள்கிறான்.  எருமையை இன்ஞிம் கொஞ்சம் அருகில் போகும்படி உணர்த்துகிறான்.  பறவைகள் கத்துவதும், பறப்பதுமாக இருக்கின்றன.  தூரத்தில் நரி ஊளையிடுவது கேட்கிறது.

சுதர்சனன் பேச வாயைத் திறக்கிறான்.  “நல்லது அந்தணரே. நான் காத்திருக்கிறேன்.  அவசரமே இல்லை” என்கிறான்.

விருந்தோம்பலுக்குப் புதிய பரிமாணத்தையே காட்டிவிட்ட சுதர்சனனைப் பார்த்து எல்லோர்க்கும் வாயடைத்து விட்டது.  ஆனால், இந்த உலகத்தில் வளமோடு வாழ்வதன் ரகசியத்தை அறிந்து கொண்டார்கள்.

ஏகவதிதான் எதிலும் ஒட்டுதல் இல்லாமல் ஆகிவிட்டாள்.  கணவன் எம பயத்தை வென்றதைக் கொண்டாடும் இஷ்டமில்லாதவளாகக் காணப்படுகிறாள்.

வாழ்க்கையில் பழைய பிடிப்பை – ஒட்டி உறவாடும் நிலையை மனைவியிடம் ஏற்படுத்த – உடைந்த நிலா காயும் இரவில் – விரிந்த இரவு மலர்கள் காமதேவன் வேலையை வாசனையால் எளிதாக்கும் வேளையில் ” இனி நமக்கு மரணமேயில்லை ஏகவதி” என்கிறான்.

“உங்களுக்கு” என்கிறாள் ஏகவதி.

(தொடரும்)