பதான்கோட்:

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், போலீஸார் சிறப்பாக செயல்பட்டதால் விரைந்து நீதி வழங்க முடிந்ததாக விரைவு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ரசனா கிராமத்தை சேர்ந்த 8 வயது நாடோடி இன சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குதிரைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாள்.

இதுபற்றி அவளுடைய தந்தை புகாரின் பேரில், கடந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி ஹிராநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 17-ம் தேதி, சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். பிரேதபு பரிசோதனையில், அவள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காணாமல் போன குதிரையை கண்டுபிடித்து தருவதாக அச்சிறுமியை ஒரு சிறுவன் அங்குள்ள கோவிலுக்கு கூட்டிச்சென்றதும், அங்கு மயக்க மருந்து கொடுத்து அடைத்து வைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தடியால் அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக, அந்த கோவிலின் பூசாரி சஞ்சி ராம், அவரது மகன் விஷால், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் தத்தா, போலீஸ் ஏட்டு திலக் ராஜ், கிராமவாசியான பர்வேஷ் குமார் மற்றும் சஞ்சி ராமின் உறவுக்கார சிறுவன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சஞ்சி ராமிடம் ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு, ஆதாரங்களை அழித்ததாக போலீஸ் அதிகாரிகள் மீது குற்றமஞ் சாட்டப்பட்டது.

சிறுவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு சார்பில் நடந்த பேரணியில், அப்போது மெகபூபா முக்தி அரசில் பா.ஜனதா மந்திரிகளாக இருந்த சந்தர் பிரகாஷ் கங்கா, லால்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

அது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர்கள் இருவரும் பதவி விலகினர்.

கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி, சிறுமி வழக்கு காஷ்மீர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 8 பேர் மீதும் கதுவா நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஏப்ரல் 16-ம் தேதி, கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. சிறுவனை தவிர, மற்ற 7 பேர் மீதும் விசாரணை நடந்தது.

சிறுமி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கடந்த ஆண்டு மே 7-ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணை விரைவாகவும், ரகசியமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று கூறியது.

அதன்படி நடந்த விசாரணை, கடந்த 3-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் பதான்கோட் விரைவு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

முக்கிய குற்றவாளி சஞ்சி ராமின் மகன் விஷாலை தவிர, மீதி 6 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம், சந்தேகத்தின் பலனை விஷாலுக்கு அளித்து அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.

கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் சஞ்சி ராம், சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், மற்ற போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் ஆதாரங்களை அழித்ததற்கான குற்றவாளிகள் என்றும் நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விவரம், பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்ட சஞ்சி ராம், தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, நேற்று பிற்பகலில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது.

கொலை குற்றத்துக்காக சஞ்சி ராம், சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜுரியா, பர்வேஷ் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்த நீதிமன்றம், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது.

ஆதாரங்களை அழித்ததற்காக, மற்ற 3 போலீஸ் அதிகாரிகளான ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை சிறப்பாக விசாரித்ததாக காஷ்மீர் குற்றப் பிரிவு போலீஸாரை பாராட்டிய நீதிமன்றம், விரைந்து தீர்ப்பளிக்க போலீஸாரின் விசாரணையே காரணம் என்று குறிப்பிட்டது.

அதேபோல், இந்த வழக்கு விசாரணையில் குறுக்கீடு செய்யாமல் ஒதுங்கியிருந்த அரசியல் கட்சிகளையும் நீதிமன்றம் பாராட்டியது.