சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு செல்வதால், அதிமுகவுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவிக்க தனது உறவினரான டிடிவி தினகரனை நியமனம் செய்து  பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் நேற்று இரவு மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும், அதன் காரணமாக அவரை கட்சியில் இணைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ள சசிகலா, அவருக்கு உடனடியாக கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

அவரது நியமனம் கட்சியினரிடையே அதிருப்தியை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளரான நெல்லையை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன்,  டிடிவி தினகரன் அதிமுகவின்  துணை பொதுசெயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதை கண்டித்தும்,  சசிகலாவை கண்டித்தும் அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்  என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக அதிமுகவின் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.