சென்னை:
ஆகஸ்டு 7ந்தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளேடு அலுவலகத்தில் கருணாநிதி சிலைதிறப்பு விழா ஆகஸ்டு 7ந்தேதி நடைபெற உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட நாடு முழுவதும் இருந்து பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மம்தா பானர்ஜி கருணாநிதி சிலையை திறக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள, தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.