சென்னை: மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.
எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, ‘ஓய்வெடுக்காமல் உழைத்த’ கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார்.
இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.கலைஞர் வாழ்க…அவர் புகழ் ஓங்குக ” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]