தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தில் அப்பா – மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரு கதாபாத்திரங்களுக்கும் பிரமாண்டமான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது.

கொடைக்கானல் காட்டு பகுதிகளில் படமாக்கப்ப்பட்டு வந்த இதன் படப்பிடிப்பு மைசூரில் இப்பொழுது நடைபெறுகிறது. அப்பா கார்த்தியின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் உருவாக்கி வருகிறார்.

பிரமாண்டமான ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மொத்த குழுவும் மைசூருக்கு சென்றுள்ளது.

‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார். யூகி சேது, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் “சர்தார்” படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.