புதுடெல்லி:
மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த பின், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இவரது ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டு, சமீபத்தில் பதவியும் ஏற்றார். இதனிடையே, கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் மேகதாது அணை விவகாரம் சற்று தணிந்து இருந்தது.

ஆனால், புதிய முதல்வராக பொறுப்பேற்ற பசுவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரதமரிடம் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும் எனவும் கூறியிருந்தார். மேலும், காவிரி உபநீரை பயன்படுத்துவதில் எங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இதனை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக முதல்வர் பசுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு என்றும், காவிரி நீர் எங்கள் உரிமை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே கர்நாடக அரசு முதல் திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது என்று கூறிய அவர், இதற்கு ஒப்புதல் பெற்று திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி என்றும் கூறினார்.