பெங்களூரு:

ன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று, முதல்வர் குமாரசாமிக்கு, கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

முதல்வர் குமாரசாமி                                          –                                 கவர்னர் வஜுபாய்

கர்நாடக மாநிலத்தில், குமாரசாமி தலைமயிலான மாநில அரசுக்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்  கொடுத்துள்ள நிலையில், அங்கு ஸ்திரத்தன்மையற்ற நிலையில் அரசு நீடித்து வருகிறது. இதையொட்டி, சட்டமன்றத்தில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதங்கள் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கவர்னர் நேற்று இரவு அல்லது இன்று மதியத்திற்குள் முதல் குமாரசாமி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், மாநில சட்டமன்ற விவகாரத்தில் தலையிட கவர்னருக்கு அதிகாரமில்லை என்று கூறிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அதுபோல சபாநாயகரும் விவாதங்கள் முடிந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று பதில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், உச்சநீதி மன்றத்தில் முதல்வர் குமாரசாமி தரப்பில்,  கவர்னரின் உத்தரவை எதிர்த்து அவசர வழக்காக விசாரிக்கக் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. . அதுபோல, மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் தரப்பிலும், உச்சநீதி மன்றம் 17ந்தேதி வழங்கிய தீர்ப்பு குறித்து தெளிவான விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கவர்னர் வஜுபாய் வாலா மீண்டும் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இன்று மாலை 6மணிக்குள் முதல்வர் குமாரசாமி மெஜாரிட்டி நிரூபிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவர்னரின் மிரட்டலான எச்சரிக்கை காரணமாக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த மத்தியஅரசு முயற்சித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.