கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 41 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

இந்த பட்டியலில், கிட்டூரில் இருந்து பாலாசாகேப் பாட்டீல், பாதாமியில் பீமசேன சிம்மனகட்டி, அஃபசல்பூரில் இருந்து எம்.ஒய்.பாட்டீல், குல்பர்கா தட்சினாவில் அல்லம்மா பிரபு பாட்டீல், கங்காவதியில் இட்பால் அன்சாரி ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

மேலுகோட் சட்டமன்றத் தொகுதி கூட்டணி கட்சியான சர்வோதயா கர்நாடகா கட்சியின் தர்ஷன் புட்டண்ணையாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை சேர்த்து மொத்தம் 42 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இரண்டாவது வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 124 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை கடந்த மார்ச் 24ம் தேதி காங்கிரஸ் வெளியிட்டது.

மே 10- ம் தேதி வாக்குப்பதிவும், மே 13- ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.