பம்பா:  கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ந்தேதி  சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த  பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு  வர அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவியது முதல் சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம், ஓணம் பண்டிகைக்கு நடை திறக்கப்பட்ட போது தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாத பூஜையின் போது முன்பதிவு செய்திருந்த பக்தர்களில், பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதில் எழுந்த பிரச்சினை காரணமாக முன்பதிவு செய்த 6772 பக்தர்கள் தரிசனத்திற்கு வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், வழக்கமான மாதாந்திர பூஜைக்காக, வர இருக்கும் கன்னி மாதத்திற்காக செப்டம்பர் 16ல் சபரிமலை நடை திறக்கப்படும் என்றும், பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவசம் போர்லடு  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் செப்டம்பர் 16ம் தேதி மாலை வழக்கமான மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். செப்டம்பர் 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

செப்டம்பர் 21ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் நடக்கும். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர்., கொரோனா ‘நெக்கட்டிவ்’ சான்று அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்ததற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் முன்பதிவு செய்ய ஐயப்ப பக்தர்கள் சபரிமலையின் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.