சென்னை: பெரியார் சிலை குறித்த சர்சைக்குரிய வகையில் பேசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர், கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலை உடைத்து அகற்றப்படும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாள் என கனல் கண்ணன் கூறியிருந்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, அவர்மீது, திராவிடர் கழகம் புகார் கொடுத்தது. அதன்பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.  அவர்மீது,  கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து புதுச்சேரியில் இருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ம் தேதியன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்துள்ளார். கனல் கண்ணனின் ஜாமின் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.