சென்னை

மலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய நாசரின் மனைவி கமீலா திமுக தலைவர் மு க ஸ்டாலினைச் சந்தித்தார்.

நடிகர் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் தொடங்கியதில் இருந்தே பல திரையுலக பிரபலங்கள் அவர் கட்சியில் இணைந்தனர்.  அவருக்குக் கட்சியின் பல பொறுப்புக்கள் அளிக்கப்பட்டன.  அவ்வகையில் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன், நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

கமீலா நாசர் தமக்கு அளிக்கப்பட்ட மாநிலச் செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.    அவர் விரும்பிய தொகுதியில் அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.  அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததையொட்டி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் கமீலா நாசர் திடீரென திமுக தலைவர் மு க ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளார்.  அவருக்கு வாழ்த்து சொல்லத் தாம் நேரில் சந்தித்ததாகவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கமீலா தெரிவித்துள்ளார்.