சென்னை:

ந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விஷத்தை கக்கும்  கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று  பேசியுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தபோது, இஸ்லாமிய மக்களின் வாக்கை பெறும் நோக்கில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று அதிமேதாவி தனமாக பேசியிருந்தார்.  முஸ்லிம் ஓட்டுக்காக அவர் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரண மாக அவருக்கு எதிராக குரல் உயர்ந்துள்ள நிலையில், நேற்றைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குள் முடங்கினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கமலின் பேச்சு இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. கமலின் பேச்சுக்கு ஆதரவாக கி.வீரமணி, கே.எஸ். அழகிரி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு நாக்கில் சனி இருக்கிறது. தீவிரவாதத்துக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதமெல்லாம் கிடையாது.

இந்து தீவிரவாதி என்று சொல்லி சிறுபான்மையினர் ஓட்டை வாங்க நடிக்கும் கமலின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் விஷமாக இருக்கிறது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசும் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கட்சியைத் தடைசெய்ய வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “காந்தியைக் கொலை செய்த கோட்சே கொலைகாரன்தான். ஆனால், சமுதாயத்துக்கு அச்சம் உண்டாக்கினான் என்று கூற முடியாது. எனவே, அவனை பயங்கரவாதி என்று கூறுவதே தவறு.

கமல்ஹாசன் ஒரு மகா முட்டாள். அவருக்கு என்ன பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்று தெரிவதில்லை. அவரை சிறைக்கு அனுப்புவதைவிடப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்ப வேண்டும்” என்று விமர்சித்தார்.