சென்னை: தமிழ்நாடு அரசு நாளை (15ந்தேதி) தொடங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது. அது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

திமுக 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, ஆட்சிக்கு வந்ததும், அறிவித்த  பெரும்பாலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி, அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட உள்ளது.

முன்னதாக  கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன.  பின்னர் மேலும் அவகாசம் வழங்கப்பட்டு,  செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற, 1கோடியே 63 லட்சம்  பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதை ஆய்வு செய்து,  1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக வும்,  56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகையான மாதம் 1000 ரூபாய் தொகையானது வந்து சேரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும்,  தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்கப்பெறாமல் இருக்கும் நபர்களுக்கு மேல்முறையீடு வசதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், இந்த விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அனுப்பப்பட்டு பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது. குறுஞ்செய்தி வராத 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த  30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை காண ஏடிஎம் கார்டு தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த ஏடிஎம் கார்டு மூலமே கலைஞர் மகளிர் உதவித்தொகையை பயனர்கள் எடுத்துக்கொள்ள முடியும் வகையில், பிரத்யேகமாக ஏடிஎம் கார்டு வடிமைக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பிறந்தந நாளான செப்டம்பர் 15ந்தேதி (நாளை) காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தமிழக முதலமைச்சர் பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை புதிய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வர வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள்! அண்ணாமலை குற்றச்சாட்டு

கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல் தினசரி ரூ.5000 ‘பைன்’! ஆர்.பி.ஐ அதிரடி