சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும், 2023ம் ஆண்டுக்கான ‘தகைசால் விருது’க்கு திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணி பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதினை,  சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விருது வழங்கப்பட உள்ளது.

கி.வீரமணி  1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச்சிறப்பாக பணி செய்து வருகிறார். தகைசால் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு. ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை,

பெரியார் பிஞ்சு. The Modern Rationalist -(ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்.திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்”விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும். பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.