சென்னை

மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கொண்டு வரலாம்  என கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,

“காவிரி டெல்டாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்ட விவசாயிகளின் கண்ணீர் வற்றாத கண்ணீராக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்குப் பயிர்களுக்கு போதிய காவிரி தண்ணீர் வரத்து இல்லாததே காரணம். 

மிகவும் சிக்கலான இந்த பிரச்சினையில் அண்டை மாநிலத்துடன் எப்போதும் நல்லுறவு பேணுவதே மக்கள் நலப் பாதுகாப்புக்குரியதாக அரசியல் அமையும் என்ற அடிப்படையில் மிக எச்சரிக்கையுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். 

நாட்டின் நதிகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டி வாஜ்பாய் காலத்தில் இருந்து கூறியதில், ஏன் இந்த 9 ஆண்டுக் கால மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை?. 

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை விட ஒரே நதிநீர் இணைப்பு ஏற்பட்டிருந்தால் வெள்ளம், வறட்சி என 2 கொடுமைகளில் இருந்தும் நம் நாட்டு மக்கள் அனைத்து மாநிலத்தவரும் காப்பாற்றப்பட்டு மகிழ்ச்சி வாழ்வு வாழ்வார்கள். இதைச் செய்யத் தவறிய ஆட்சியை மாற்றி புதியதோர் வரலாறு படைக்க நாட்டு மக்கள் ஆயத்தமாகிட அரிய தருணம் நெருங்குகிறது.” 

என்று தெரிவித்துள்ளார்.