கல்கத்தா,

சுப்ரீம் கோர்ட்டு தண்டனை காரணமாக தலைமறைவாக இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது. இதன் காரணமாக இன்று அவர் வெளியே வருவாரா என்று பரபரப்பு நிலவி வருகிறது.

நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய நீதிபதி கர்ணன் பிறப்பித்த அதிரடி அலம்பல் உத்தரவு காரணமாக அவருக்கு 6 மாதம் சிறை  தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தலைமறைவான நீதிபதி கர்ணன், தனது தண்டனையை மறுஆய்வு செய்யு மாறும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். 4 முறை அவரது மனு சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பதவி ஒய்வு பெறும் கர்ணன், இன்று வெளி உலகத்துக்கு வருவாரா என்று எதிர்ப்பு நிலவி வருகிறது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கர்ணன் பணியாற்றியபோது, சக நீதிபதிகள்மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அவரை கொல்கத்தா ஐகோர்ட்டு மாற்றி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கொல்கத்தா ஐகோர்ட்டு சென்ற நீதிபதி மீண்டும் சர்ச்சை குறித்து கூறியதால், சுப்ரீம் கோர்ட்டு அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது.

அவருக்கு மனநல பரி சோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், அவர் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் உச்சக்கட்டமாக,  உச்சநீதிமன்ற  நீதிபதிகளுக்கே தண்டனை விதிப்பதாக  அறிவித்தார். அதன் காரணமாக அவர்மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.

இதையடுத்து அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், நீதிபதி கர்ணன் அவர்களிடம் சிக்காமல், தலைமறைவானார்.

சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக  தலைமறைவாக வாழ்ந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைபெறுகிறது.இதையடுத்து இன்றாவது அவர் வெளியே வருவாரா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்திய வரலாற்றிலேயே பணியில் இருக்கும் ஒரு ஐகோர்ட்டு நீதிபதிக்கு, சுப்ரீம் கோர்ட்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்ததும்,

தீர்ப்பு காரணமாக தலைமறைவாக இருந்து வரும் நீதிபதி கர்ணனின் பதவிகாலம் இன்றோடு முடிவடைவதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து,  நீதிபதி கர்ணனைத் தேடும் பணி, மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.