சென்னை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று 3வதுமுறையாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி,  இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வுகளால், கிராமப்புற மாணவர்களும், மாநில மொழிகளில் படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  ‘நீட்’ தேர்வை ரத்து செய்வது குறித்து ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இதன் முன்னோட்டமாக  சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவினர  அந்த குழு ஏற்கனவே 2 முறை கூடி ஆலோசனை நடத்தியது. கடந்த ஆலோசனையின் போது செய்தியளார்களிடம் பேசிய  நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வால், எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாகவும்,  25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளதாகவும், முக்கியமான ஆவணங்கள் வர வேண்டி உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துகளும் வந்த பின், அறிக்கை இறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 3-வது முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அதைத்தொடர்ந்து நீட் தேர்வு தாக்கம் குறித்து மக்களிடம் கேட்ட கருத்துக்கள் குறித்து, அறிக்கை தயாரித்து, விரைவில் தமிழகஅரசிடம் வழங்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.