திருவனந்தபுரம்: தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்டு 21ம் தேதி வரை நீதிமன்றகாவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தலில் தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிவடைய  அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  பின்னர் அவருக்கு ஆகஸ்டு 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சியில் விற்க முயன்றது தெரிய வந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.