தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், நேற்று (ஜூன் 23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது .

வாக்குப்பதிவு முடிந்தவுடன், சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்தவர்கள் பாக்யராஜ், ஐசரி கணேஷ், ஸ்ரீகார்த் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இரவு 8.30 மணிக்குத் தான் தேர்தல் இடத்தையே தெரிவித்தார்கள். தபால் வாக்குகளில் தான் நிறைய குளறுபடிகள்.தபால் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கையே கிடையாது.

பாண்டவர் அணியைச் சேர்ந்த ப்ரவீன் காந்தி சில பேப்பர்களை எடுத்துக்கொண்டு வாக்குப்பதிவு மையத்துக்குள் செல்ல முற்பட்டார். அதை நாங்கள் தடுத்தோம். இதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். இது எங்களுக்குத் தெரிந்து நடந்தது. இதைப் போல் தெரியாமல் எவ்வளவு நடந்ததோ என்பது இனிமேல் தெரியவரும்.

நீதிபதி பத்மநாபன் பாண்டவர் அணிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதே போல, நீதிபதியை நிர்பந்திக்கும் எந்த செயலு நாங்கள் மேற்கொள்ளவில்லை. அப்படி எங்களை அறியாமல் நடந்திருந்தால் மன்னிப்பு கோருகிறோம். ஆனால், இதற்காக என்னை சங்கத்திலிருந்து நீக்குகிறார்கள் என்றால், அதே சட்டத்தில் 3 செயற்குழுவில் செயலாளர் மற்றும் துணைத்தலைவர் கலந்து கொள்ளாவிட்டால் பதவியில் இருக்கவே முடியாது. அதை யாருமே செய்யவில்லையே. அது செல்லும் என்றாலும் இதுவும் செல்லும் என கூறினர்.