டில்லி:

சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று பரபரப்பாக நடந்தது.

குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த போது 2005-ம் வருடம் சோராபுதீன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்ட்டர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்த வழக்கில் அமித்ஷா கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ம் வருடம் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து சர்ச்சை எழுந்தது.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் அமித்ஷாவின் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக துஷ்யந்த் தவே ஆஜரானார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். இது குறித்த ஆவணங்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

துஷ்யந்த் தவே, “சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக ஆஜரானவர் ஹரீஷ் சால்வே. இந்த வழக்கில் அவர் மகராஷ்டிரா அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, நீதிபதி லோயா பிரேத பரிசோதனையின் போது அவரது குடும்பத்தினர் யாரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால் ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயாவின் மரணத்தை சிலர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். கெட்டப்பெயர் ஏற்படுத்திவிட்டார்கள் என்றார். இதற்கு பதிலடியாக தந்த தவே, “உங்களால்தான் நீதித்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்றார். இதை ஹரீஷ் சால்வே மிகக் கடுமையாக எதிர்த்தார்.

“தார்மீக நெறிகள் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை” என பதிலுக்கு பேசினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், யாருடைய பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

இப்படியாக நேற்று உச்சநீதிமன்றத்தில் கடும் விவாதம் நடந்தது.